Thursday, November 15, 2012

இலங்கை யுத்த மீளாய்வு அறிக்கை ஐநாவிற்கு சிறந்த படிப்பினை – பான் கீ மூன்


இலங்கையில் தமீழீழ விடுலைப் புலிகளுக்கு எதிரான இரத்தகளரி மிக்க
இறுதி உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பொதுமக்களை பாதுகாக்கும் தனது கடமையில் இருந்து ஐக்கிய  நாடுகள் சபை தவறியுள்ளதாக அதன் உள்ளக ஆய்வறிக்கை ஒன்றுதெரிவித்துள்ளது.

இறுதிகட்ட யுத்த்த்தின்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதறகென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த குழவே இதனைத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர், அதன் முகவர் நிறுவனங்கள்,இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்கள், பாதுகாப்பு பேரவை மற்றும் மனித உரமைகள் பேரவை  ஆகியன தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த கண்டறிவுகள் உலகளாவிய ஐக்கிய நாடுகளின் பணிகளில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட பான் கீ மூன் இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபை தகுந்த படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளும் என்பதில் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மோதல்களுக்குள் சிக்கிய நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை எதிர்பார்த்துள்ள உலக மக்களின் நம்பிக்கையை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பான் கீ டூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டில் இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் இறுதிக் கட்ட மோதல்கள் இடம்பெற்ற கடைசி மாதத்தில் குறுகிய பகுதிக்குள் மக்கள் சிக்கியிருந்தனர்.

இதன்காரணமாக சுமார் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஐநாவினால் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் குறித்து 128 பக்கங்களைக் கொண்ட புதிய மீளாய்வு அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னைய மதிப்பீடுகள் மற்றும் அரசாங்க அறிக்கைகளின் பிரகாரம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 10 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே கொல்லப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் சுமார் 70 ஆயிரம் பொதுமக்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் குறிப்பிடுவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆரம்ப எச்சரிக்கைகளுக்கு போதுமானளவு பதிலளிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி கண்டுள்ளதாகவும் ஐநாவின் உள்ளக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்டங்களில் மோதல்கள் உருவாகிய தருணத்திலும் அதன் பின்னரும் அவை மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஒன்றாக அமைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை ஐக்கிய நாடுகளின் பொறுப்புக்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் பான் கீ மூன் நியமித்த குழுவின் மீளாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment